மதுரை மாநகரம்.
மாலை சூரியனின் ஒளியில் கரைந்து கொண்டிருந்தது. மீனாட்சி அம்மன் கோயிலின் கம்பீரமான கோபுரம் வானம் நோக்கி வளர்ந்து நிற்க, அதன் முன் நின்றிருந்தார்கள் ஒரு வெள்ளை தோல் கொண்ட இங்கிலாந்துக் குடும்பம். அவர்களுடைய கண்களில் இருந்த சிறுபிள்ளைத்தனமான ஆர்வம்.
“வீ ஆர் ஸ்டாண்டிங் இந்த பிரண்ட் ஒப் நாட் ஜஸ்ட் எ டெம்பிள், பட் அவர் பாமிலி ஹிஸ்டரி!,” என்றார் Robert Rous. அந்த மெல்லிய வாக்கியம், கோயில் மணியோசையோடு கலந்து, காலம் தாண்டிய ஓர் கதவைத் திறந்தது.
=======
1812ம் ஆண்டு. ஆங்கிலேய ஆதிக்கம் வீரியம் அடையத் துவங்கி இருந்த நாட்கள்.
ஆங்கிலேய அரசு தனது இளம், ஒழுக்கமான அதிகாரியான பீட்டர் ரௌஸ் -ஐ மதுரைக்குக் கலெக்டராக அனுப்பியது. மதுரை நகரம் அவனுக்குப் புதியது. பழமையான கற்சிற்பங்கள், திருக்கோயில்களின் மண்வாசனை, மாசித்தெருக்களின் சத்தம். பூங்கா நாட்டில் வளர்ந்த பீட்டருக்கு புழுதியான மதுரை அறவே புதியது.
முதல் நாள் அலுவலகத்துக்குச் செல்லும் போது, அவன் குதிரை கோயில் வாசலை கடக்கும்போது திடீரென நின்றது. அப்படியே நின்று எதையோ உணர்ந்தது போல. அவன் அதை உசுப்பியும் நகர மறுத்தது ஏனோ. பீட்டருக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை. "இந்தக் குதிரை ஏன் சண்டி பண்ணுகிறது இன்று?"
அருகில் இருந்த ஒரு முதியவர் மெதுவாக சிரித்துக் கூறினார்: “ஐயா… இது அம்மன் கோவில் வாசல். குதிரை கூட மரியாதை காட்டும் இடம்.”
அந்த ஒரு வாக்கியம், பீட்டரின் வாழ்கையையே புரட்டிப் போடும் கணமாக மாறும் என் அப்போது அவனுக்குத் தெரியாது.
சற்றே திரும்பிப் பார்த்தான். மீனாட்சி அம்மன் கோவிலின் கீழ கோபுரம் பிரமாண்ட கோலத்தில் அவனைப் பார்த்துச் சிரித்தது. அந்த காண நேரத்தில் அவனை மின்னல் தாக்கியது போல உணர்ந்தான். ஒன்றும் புரியா நிலையில் "ஓ ஜீசஸ் ! வாட் இஸ் ஹாபெனிங் டு மீ?" எனப் புலம்பினான், மனதுள். ஏசப்பா வழி காட்டுவார் என நம்பி அலுவலகம் நோக்கி குதிரையைச் செலுத்தினான்.
ஆனாலும் மனத்துள் பச்சை மேனி கொண்ட ஒரு பச்சிளம் பாலகியின் பிம்பம் அவன் கண் முன்னே வந்த வண்ணனும் இருந்தது. கடைக்கண் பார்வையிலேயே என்னை கட்டிப் போடுபவள் யாரோ? அழகின் உருவமாய், அலங்காரப் பிரியையாய் மீன் விழி கொண்டு சுண்டி இழுப்பவள் அந்தக் கோவிலில் உறைபவளோ?
தன்னையும் அறியாமல் அந்தக் கோவில் பால் ஈர்க்கப்படுவதை அவன் உணர்ந்தான்.
அன்றிலிருந்து— ஒவ்வொரு நாளும் கோயில் வாசலைக் காணும் போது, அவன் குதிரையிலிருந்து இறங்கி, தொப்பியை எடுத்து, காலணிகளைக் களைந்து, அந்தச் சிறிய பிரம்ம புனிதப் பாதையில் காலில் நடந்து செல்லுவதை வழக்கமாக்கிக் கொண்டு இருந்தான்.
மதுரை மக்கள் இதைக் கண்டு ஆச்சரியப்பட்டனர். ஒரு ஆங்கிலேயன்…நிறுத்தி நம் தெய்வத்துக்கு இவ்வளவு மரியாதை தருகின்றானா? நம்பவே முடியவில்லையே!
அவர்களின் மனத்தில் அவன் பால் மதிப்பும் மரியாதையும் அந்த மீனாட்சி அம்மன் கோவிலின் மேற்கு கோபுரத்தை விட பன் மடங்கு உயரத் தொடங்கியது. அவனை “பீட்டர் பாண்டியன்” என மரியாதையாய்க் காண ஆரம்பித்தனர். இரண்டாம் நெடுஞ்செழிய பாண்டியனுக்கு வாரிசாக அவனைக் கொண்டாடினர்.
அதற்கேற்றார்ப் போல அவனும் நல்லாட்சி நடத்தி நாலா பக்கமும் பெயர் சம்பாதித்தான்.
=======
ஒர் இரவு.
வானமே கரும்படிந்தது. புயல்—முழு மதுரையையும் விழுங்கும் வேகத்தில் வந்தது. காண மழை. எங்கும் வெள்ளக் காடு. வைகை நதி, அன்றிரவு அது ஒரு காட்டு மிராண்டியாக மாறி இருந்தது.
பீட்டர் பாண்டியன் தனது பங்களாவில் தூங்கிக் கொண்டிருந்தான். அவன் குடும்பத்தார் இங்கிலாந்துக்கு சென்று இருந்தனர்.
அப்போது—
சலக்....சளக்..
அணிகலன்களின் ஒலி. தெளிவான, சிறிய, பெண் குழந்தையின் நடையின் இசை. அவன் கண்களைத் திறந்தான். தீப்பந்தத்தின் ஒளியில் அவளை மறுபடியும் பார்த்தான்.
கதவின் முன் நின்றாள்—அதே சிறுமி. பட்டு ஆடை. பொற்கொலுக்கள். மணியோசை கால்களில். கண்ணில் வினோதமான ஒளி.
“பீட்டர்… கம் ஹியர் …”
அவள் சொன்ன குரல் பீட்டரின் உள்ளத்தை மின்சாரம் போலத் தழுவியது. கட்டுண்டவன் போல அவன் பின்தொடர்ந்தான்.
ஒரு நொடிதான். அடுத்த கணம் அவள் ஓடினாள். பின் தொடர்ந்து அவன் ஓடினான். என் ஓடினான் என்று அவனுக்கே புரியவில்லை . ஆனாலும் அந்தகே குழந்தையின் வசீகரிப்பில் தன வசம் இழந்து இருந்தான்
பங்களா வாயில் தாண்டி வெளியே ஓடி வந்த மறு கணமே—
"தடால்" என்று பேரோசை. பீட்டர் ஒரு கணம் அதிர்ந்தான். ஒன்றும் புரியவில்லை. அனால் வீரன் அல்லவா? சுதாரித்து கொண்டான்.
சத்தம் வந்த திசை நோக்கி மெல்லத் திரும்பினான். அவன் முழு வீடு வெள்ளத்தில் கரைந்து விழுந்து ஓடிக் கொண்டிருந்தது. ஆறு கணம் தாமதமாகி இருந்தாலும் அவன் படுக்கையே பாடையாய் மாறி தத்தநேரி மயானத்தை நோக்கி சென்று இருக்கும். "ஓ மை காட் !"
ஒரு நொடி அவன் மூச்சே அடங்கியது. அந்தச் சிறுமியின் வழி நடத்தலில் தான் தாம் உயிர் தப்பினோம் எனத் தீர்க்கமாய் நம்பினான். மனம் முழுதும் நன்றி நிரம்பி இருந்தது. மீண்டும் அவன் அந்தச் சிறுமியைப் பார்க்கத் திரும்பினான். ஆனால்—
அவள் அங்கு இல்லை. கோயில் தெருக்களின் இருளில் எப்போதோ கரைந்து விட்டிருந்தாள்.
அவன் மண்டியிட்டான். வானம் நோக்கி காய் உயர்ந்த்தது. "ஓ ஜீசஸ்! வேர் ஐஸ் ஷி?"
=======
வெள்ளம் வடிந்து இயல்பு நிலை நோக்கி நான்மாடக் கூடல் நகரம் நகரத் துவங்கி இருந்தது. முத்த காரியமாக மரகத வள்ளியை தரிசிக்க கோயிலுக்கு பீட்டர் விரைந்தான். அம்மன் சன்னதி முன் நின்றபோது, அவன் கண்களில் மாடக்குளம் கண்மாய் உடையக் காத்து இருந்தது. அந்த மனிதனின் அந்தக் கண்ணீர், வார்த்தைகளால் எழுத முடியாத ஒன்று.
அவன் அர்ச்சகரிடம் கேட்டான் :
“ஐ வாண்ட் டு கிப்ட் ஹர் சம்திங். இ owe மை லைப் டு ஹர். வாட் கேன் ஐ டூ?”
அர்ச்சகர் மெல்ல சிரித்தார்.
“அம்மனின் திருவடிகளுக்கு ஏதாவது காப்பு கிடைத்தால் அவள் மரகத மேனிக்குப் பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன் …”
அந்த நொடியே முடிவு செய்து விட்டான் . தெற்கு ஆவணி மூல வீதியின் ஆகச் சிறந்த நகைக் கொல்லனை கூப்பிட்டான். கட்டளை இட்டான்.
அம்மனுக்கு சிரத்தையுடன் செய்யப்பட தங்கப் பாதுகைகள். தங்கப் பாதுகை. 412 ரூபிகள், 72 மரகதங்கள், 80 வைரங்கள். அதன் அடிப்பகுதியில் பொறிக்கப்பட்டது ஒரு வார்த்தை: "PETER". வெகு விரைவிலேயே அம்மனின் பாதங்களை அலங்கரித்தது.
மதுரை மக்கள் அந்தப் பாதுகையைப் பார்த்து பார்த்துப் பரவசம் அடைந்தனர். அது “பீட்டர் பாதுகை” எனப் பெயர் பெற்றது காலப் போக்கில்.
இன்றும் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருவிழாவில், மீனாட்சி அம்மனின் திருவடிகளில் அணிவிக்கப்படுவது இதே பீட்டர் பாதுகையைக் காணலாம். இருநூறு ஆண்டுகளாகத் தொடரும் மரபு.
நாட்கள் வருடங்கள் ஆயின. பீட்டர் மல்லிகை மாநகரில் St. George’s Cathedral ஒன்றை நிறுவினான். பிரதி ஞாயிறு தோறும் அங்கு சென்று ஜெபம் செய்தான். ஏசுவின் பால் எவ்வளவு பற்று இருந்ததோ அதே அளவு அம்மனும் அவனை ஆட்கொண்டு இருந்தாள்.
இதற்கிடையில், ஆங்கில அரசு பீட்டருக்கு இங்கிலாந்து திரும்புமாறு உத்தரவிட்டது. ஆனால் அவன் ஒரே வரியில் பதிலளித்தான்: “என் வீடு இங்கு. என் தாய் இங்கு. என் சாவும் தாய் மடியில் தான் நடக்கும்”
அவன் மதுரையிலேயே வாழ்ந்தான். அங்கேயே இறந்தான். அவனது இறுதி விருப்பம்—
“என் கல்லறை மீனாட்சி அம்மன் கோயிலை நான் எப்போதும் காணும் திசையில் இருக்க வேண்டும்.” இன்று கூட -St. George’s Cathedral இல் அனைத்து கல்லறைகளும் ஒரு திசையை நோக்கி இருக்க, ஒரே ஒரு கல்லறை மட்டும்…மறுத்திசையாக மீனாட்சி கோயிலை நோக்கிக் கிடக்கிறது.
அவன் இறந்த பின்னும்… அவன் கண்கள் தேடியது ஒரே திசை— அம்மனின் கோபுரம்.
No comments:
Post a Comment