Showing posts with label tamil short story. Show all posts
Showing posts with label tamil short story. Show all posts

Sunday, October 19, 2025

கடலுக்கு அப்பால்

கடல் தான் அவளின் உலகம்.

கடலுக்கப்பால் - அவன்.

ஒவ்வொரு காலையும் அவள் கடற்கரைக்கு வந்தாள்.

மணலில் பாதம் மூழ்கியபடி, வானத்தை பார்த்தாள் —

எங்காவது ஒரு நிழல் தோன்றுமா என்று.

கைகளில் ஒரு பழைய கடிதம்.

எழுத்துக்கள் மங்கியிருந்தாலும், அவள் மனதில் தெளிவாகவே:

“கடலுக்கு அப்பால் நான்... இக்கடிதம் உன் வசம் வரும்போது

நான் இன்னும் உயிரோடிருப்பேனா?  தெரியாது.


ஆனால் ஒவ்வொரு அலைக்கும் உன் நெஞ்சின் துடிப்பு போல ஒலி உண்டு.”


மூச்சு போனாலும் நினைவு போகாது,

மணல் கூட காத்திருக்கும் — அவன் காலடிக்கு.

================================================


அவன்.  அவளின் வாழ்வு முழுக்க நிறைத்தவன்.

காலை வேளையில் புன்னகை, இரவு வேளையில் கனவு. இருவரும் கனவு கந்தர்வ கோட்டையில் கூட்டு வாசம். அவனே அவள் அகிலம் ஆனான். 


அப்படி இருந்த நாளில், திடீரென்று கதவு தட்டல். ஆங்கிலப் படையினர்.

"துரோகி" என்று சொல்லி இழுத்துச் சென்றார்கள்.


அவளுக்குத் தெரிந்தது ஒன்றே — அவன் தன் நாட்டு சுதந்திரத்துக்காகப் போராடினான்.

கத்தினாள். கதறினாள். 


“எங்கு கொண்டு போகிறீர்கள் அவனை?’

அவர்கள் சொன்னார்கள் — “காலா பானி.” 


==================================

காலா பானி — கடலின் நடுவே ஒரு நரகம்

அந்தமான் கடலின் மையத்தில் கட்டப்பட்ட சிறை.

சுற்றிலும் கடல், நடுவில் கல் கோட்டை.

ஒவ்வொரு கைதிக்கும் தனி அறை.

ஒளி வர ஒரு சிறிய சிறு ஜன்னல் மட்டும்.

உயிர் குரல்கள் கடலில் கரைந்துபோகும்.

அங்கிருந்து யாரும் திரும்பியதில்லை.

அங்கே அவனை அடைத்தார்கள்.

எண்ணெய்-கல்லைத் திருப்பும் தண்டனைச் செக்குச் சக்கரம்.

சூரியன் எழுந்தது முதல் மறையும் வரை — வலி, வியர்வை, மௌனம். 

வலி. புண். சீழ். நோய். காய்ச்சல். 

வேதனை. வலி. மரண வலி. 


வெள்ளையனின் ஒவ்வொரு அடியும் நினைவுகளை அழிக்க முயன்றது. ஆனால் நினைவு மரிக்கவில்லை.

அந்த இருள் அறையிலும் அவனுக்கு தோன்றியது — அவள் முகம்.

அவன் மெல்ல சொன்னான்,

“காத்திரு... ஒருநாள் நான் திரும்புவேன்.”

மாதங்கள் வருடங்களாகின.


அவள் வாழ்க்கை பொறுமையும் வெறுமையுமாய் மாறியது.


ஒவ்வொரு காலையும் தீபம் ஏற்றி அவனின் புகைப்படத்தை நோக்கி மௌனமாய் நின்றாள். அவளின் பிரார்த்தனை — அவன் பெயர் மட்டும்.

தபால்காரன் கதவு கடக்கும் ஒலி — மூச்சு நின்றுவிடும். அந்த நாளில் ஒரு கடிதம் வந்தால், அவள் உயிரே வந்தது போல இருக்கும். வந்தது ஒரு கடிதம், அன்று.

“இங்கு இரவு இருளல்ல… அது மரணத்துக்காக காத்திருப்பு.

ஆனால் உன்னை நினைத்தால் — காற்றில் உன் வாசனை.”

அந்த வரிகளை அவள் வாசித்தாள்.

கண்ணீர் காகிதத்தைக் கரைத்தது.

அதை மெல்ல மடித்து உதட்டில் தொட்டாள்.

“வாழ்ந்திரு... நான் காத்திருக்கிறேன்,” என்றாள்.

அந்தமான் சிறையில் அவன் உடல் சுருங்கியிருந்தது.ஆனால் மனம் நிமிர்ந்திருந்தது. சுவற்றில் கரியால் எழுதியான் – அவள் பெயரை . பல முறை. 


“நான் திரும்பவில்லை என்றால் கோபப்படாதே.

என் இதயம் துடிக்கிறது — நான் காணாத சுதந்திரத்திற்காகவும் உனக்காகவுமே!.”

காய்ச்சலுடன் கிடந்தபோதும், அவன் நம்பிக்கை ஒன்றே அவனுக்கு மருந்து. “அவள் இன்னும் காத்திருக்கிறாள். போக வேண்டும் – சீக்கிரமே!”

அந்த இரவு - அவள் திடீரென்று விழித்தாள். மூச்சு முட்டியது. நெஞில் இனம் புரியாத ஒரு கனம். எழுந்து கடற்கரைக்கு ஓடினாள். அலைகள் கொந்தளித்தன. 


அவள் கத்தினாள்,

“அவன் உயிரோடுதான் இருக்கின்றானா? ஒரு சமிக்யையாவது கொடு!”

கடல் கரைந்தது. சத்தமாக அலறி திடீரென்று அமைதியானது போலிருந்தது.


கடல் சொன்னது — ‘அவன் வருவான்’,

அவள் சொன்னாள் — ‘நான் காத்திருப்பேன்.’


வருடங்கள் கடந்தது. கடிதங்கள் வரத்து நின்றது. மக்கள் மெதுவாக மறந்து விட்டார்கள்.


அவள் மட்டும் இன்னும் கடற்கரைக்கு வந்தாள்.

கடலின் வெள்ளை நுரை – அவள் கூந்தலில் குடியேறி இருந்தது.

ஆனால் வாடிய கண்கள் இன்னும் அதே வருடலில். தேம்பிய நெஞ்சம் தேடலில் தஞ்சம். 

சில நேரங்களில் அவள் தனக்குள் நகைத்தாள்.


“அவன் இன்னும் இங்கேயே இருக்கிறான் போல.

அலை ஒலி... காற்றின் தழுவல்... அவனின் மூச்சு போல.”

ஒரு மாலை, ஒரு சிறுவன் ஓடி வந்தான்.

“மாமி! கடற்கரையில் இதைக் கண்டெடுத்தேன்!”

அவன் கையில் ஒரு இரும்புப் பெட்டி. உள்ளே, உப்பு நீரால் மங்கிய காகிதம். அதில் மங்கிய எழுத்துக்கள்:

“கடலுக்கு அப்பாலும், உன்னையே நினைத்தேன்.”

அவள் கைகள் நடுங்கின.

அது அவனிடமிருந்து தானா?

அல்லது வேறொருவர் தன் காதலிக்காக எழுதியதா?

தெரியாது.

ஆனால் அவள் இதயத்தில் முழு நம்பிக்கை —அது அவன்தான். கண்டிப்பாக.


அலை கடந்து அவன் பெயர் வந்தது,

அழுத மனம் நின்று போனது.


அவள் கடலை நோக்கிப் பார்த்தாள். சூரியன் தங்கமாக கரைந்தான்.

“நீ வந்துட்டியா?…” என்று அவள் கிசுகிசுத்தாள்.

“கடலோடே, காற்றோடே… நீ வந்துட்டே. வா! வா!”

அலை ஒன்று வந்து அவள் காலில் முத்தமிட்டது.

அந்த இரவு தீபம் வழக்கத்தை விட பிரகாசமாக எரிந்தது.


அடுத்த நாள் காலை.

“அக்கா!” பக்கத்து வீட்டு பார்வதி. உள்ளே வந்தாள். பார்த்தாள்.

இவள் இருக்கை காலியாக இருந்தது.அவன் கடிதங்கள் தரையில் இரைந்து கிடந்தன. சில காற்றில் பறந்து கொண்டிருந்தன.


“காத்திருந்து பூத்து விட்டள்! கடலோடு கலந்து விட்டாள்!’

“அவனுடன் அவள் ஒன்றி விட்டாள்!”


மூச்சு போனாலும் நினைவு போகாது,

மணல் கூட காத்திருக்கும் — அவன் காலடிக்கு.



 

Thursday, September 25, 2025

நாரைகள்

சிற்றாறின் கரையில் அடர்ந்த நெற்காடுகள் பசுமையோடு சலசலத்தன . மார்கழி மாதக் காற்றில் வானம் நீலமாய் கண்ணில் ஒளிந்தது. இக்கிராமம் மிகத்தொன்மையாய் இருந்தாலும் சிதைவு அதிகம் இல்லை.

அந்த எல்லைப்புறக் கிராமத்தில் யாருமே பேசாமல் அமைதியாக நடந்தனர். கிழவர்கள் கூட புல்லாங்குழலை வாயிலிருந்து எடுத்து விட்டு கண்களைத் தாழ்த்தி நடந்தனர். குழந்தைகள் கூட பக்கவழி எடுத்து ஓடினார்கள். முகத்தில் பயத்தின் சாயம் மட்டும். படை வீரன் என்றால் அப்படி ஒரு மரியாதை! பரிதி சில காலம் எல்லையைக் காக்க வேறு ஊரில் இருந்து விட்டு இன்றைக்குத்தான் ஊர்த் திரும்புகிறான்.

பரிதியின் மனம் பின் நோக்கிப் போனது.   சிறுவயதில் விளையாடிய மலைக்குப் பின் உள்ள முந்திரிக்காடு சென்றான். ஒரு மரத்தில் ஏறிக் கொண்டிருக்கும் போதே, அவன் மனதில் பழைய சத்தம் கேட்டது –

“அடேய்க் கிராதகா! என் மரத்தில் ஏறுகிறாயா?” என்று ஒருகாலத்தில் கூவி கைத்தடியுடன் விரட்டிய பழைய கிழவன்.

அந்த கிழவன் இன்று இல்லை. அவன் கண்கள் வானத்தில் நிலைத்து, பனித்துளியுடன் ஒளிந்து கொண்டன. 

காலப்போக்கில், கிராமத்தின் மையத்தில் இருந்த பழைய மனை ஒன்று “அமைதிப் படை அலுவலகம்” ஆனது. இன்றிலிருந்து பரிதி தான் அதன் தலைமை அதிகாரி. 

அந்த அலுவலகத்தில் இன்று அவன் முன்  கைகளை கட்டப்பட்டு நின்றவன் – அவனது சிறுவயதுக் கூட்டாளி,  நந்திவர்மன். வந்தும் வராததுமாய் பரிதிக்குச் சோதனை. 

பரிதி அதிர்ச்சியடைந்தான்.  காவலரிடம், “இவனை நான் கூட்டிச் செல்வேன்” என்றான்.

அவர்கள் இருவரும் கிராமத்தை விட்டு நடக்கத் தொடங்கினர். நடந்துக்கொண்டு இருந்த  பரிதி மனதில் மட்டும் பழைய நினைவுகள் வந்தன 

சிறுவயதில் இருவரும் சேர்ந்து ஆற்றுப் படுகையில் மணல் வீடு கட்டியது.  

ஒரு முறை இருவரும் சேர்ந்து அக்கிராமக் கிழவனின் முந்திரியை திருடப் போனார்கள். மரத்தில் ஏறியது பரிதி. கிழவன் கத்த, அவன் சறுக்கி விழுந்தான். அடியில் விழுந்தபோது முட்கள் உடம்பைத் தைத்தன. வலியில் கண்ணீர் வந்தது. அப்போது நந்திவர்மன் தனது கையில் இருந்த முந்திரிகளை அவனுக்குக் கொடுத்தான். வலியைப் பகிர முடியாது. முந்திரியைப் பகிரலாமே!

இன்று அந்த நாள்கள் தொலைவில் போய் விட்டன.

வழி சாய்ந்தது. பசுமை வயல்கள். அந்த நிலங்களில் தான் ஒருகாலத்தில் இருவரும் சேர்ந்து பசுக்களுக்கு தீவனம் வெட்டினார்கள்.

திடீரென்று பரிதி  சத்தமாகக் கேட்டான் –

“சொல் பா, எத்தனை பேரை கொன்றிருக்கிறாய்?”

நந்திவர்மன் சற்றுக் கண்களை உயர்த்திப் பார்த்து விட்டு, மீண்டும் தலைத் தாழ்த்தினான்.

“நீ எத்தனை பேரை கொன்றாய்?” என்று எதிர்பாராமல் நந்திவர்மன் எதிர்க் கேள்வி விட்டான்.

அந்த பார்வையில் கோபம், வலி, விரக்தி அனைத்தும் இருந்தது. பின்னர் அமைதியாகச் சொன்னான்:

“எனக்குத் தெரிந்த ஒரே தொழில் நிலத்தை உழுவது. மழைப் பொய்த்தது. பல வருடமாய். வாச வேறு வழியில்லை. என்னை போறாளித் தலைவனாக்கினார்கள், ஏனென்றால் நான் ஏழை விவசாயி. வாழ வழி இல்லை. இழக்க இனி ஏதும் இல்ல. என் செயல்களுக்காக  மரணம் வந்தால் கூட நான் தயார்.”

சற்று நின்று, மெதுவாகத் தொடர்ந்தான்:

“என் தந்தை அரை ஆண்டாக படுக்கையில். அவரைத் பார்க்க கூட முடியவில்லை.”

பரிதி மனதில் தன் தந்தையின் குரலும் எழுந்தது –

“விவசாயி நிலத்தை விட்டுத் போவது எப்படி சாத்தியம்? நெல்லும், களையும், உழுத நிலமும் எல்லாம் உயிரோடு விட்டுவிட்டு போக யாருக்குத்தான் மனம் வரும்?!”

“திருமணம் ஆகி விட்டதா?” 

“ஆமாம்” என்றான் நந்திவர்மன்.

“யாருடன்?”

“அந்தச் சிறிய சித்திரக் கண்ணம்மா.”

சிரிப்பு தடுக்க முடியவில்லை பரிதிக்கு. ஒருகாலத்தில் இருவரும் அவளை எரிச்சலூட்டிக் கண்ணீர் விடவைத்தார்கள். இப்போது அவனே அவளை மணந்து குழந்தையை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறான்.

பாதையை விட்டு விலகும் போது வயலில் வெள்ளையன சோலை பறவைகள் கூட்டமாகக் குதித்து பறந்தன. அவை அன்னங்கள்.

அந்தக் காட்சி இருவருக்கும் பழைய நினைவுகளை எழுப்பியது.

பன்னிரண்டு வயதில் அவர்கள் ஒரு நாரையைச் சிக்கவைத்து கயிற்றால் கட்டினர். தினமும் அதனுடன் விளையாடினர். பிறகு ஒருநாள் யாரோ வேட்டையாடப் போவதாகக் கேட்டதும், இருவரும் ஓடிச் சென்று நாரையின் கயிற்றை அவிழ்த்தனர். பறவை முதலில் நிலத்தில் தடுமாறியது. ஆனால் சிறிது நேரத்தில் பறந்து வானில் மறைந்தது. நீண்ட நேரம் அவர்கள் வானத்தை நோக்கி நின்றிருந்தனர், நாரையின் புத்துயிரைப் பார்த்தபடியே.

இப்போது அந்த வயலில் நாரைகள் பறந்தன.

பரிதி திடீரென்று சொன்னான்:

“இங்கேயே ஒரு நாரை வேட்டை போடலாமா?”

அவன் நந்திவர்மனின் கைகளை அவிழ்த்து, “நீ பறவையை விரட்டிப் போடு. நான் கயிற்றால் பிடிக்கிறேன்” என்றான்.

நந்திவர்மன் குழப்பமடைந்தான்.  மனம் அளைந்தது. 

“இவன் என்னை இங்கேயே கொல்வானோ?” 

"என்ன இருந்தாலும் என் நண்பன், என் மீது கட்டாயம் இரக்கம் காட்டுவான்!"

"இன்று அவனொரு அரசு அதிகாரி. அவன் கடமையைச் செய்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் அவன் இருக்கிறான்!"

" இப்பொழுதே என் கதையை முடிப்பானோ?"

"எங்கோ போய்ப் பிழைத்துக்கொள். இந்த எல்லைக்குள் இருக்காதே!" 

"மன்னவன் கொற்றம் முக்கியமா. இல்லை, மனிதாபிமானம் தான் முக்கியமா?"

இருவரும் சிரமத்துடன் களையின் நடுவே ஊர்ந்து சென்றனர். திடீரென்று, நாரைகள் சில, பெரிய சிறகுகளை விரித்து நீல வானில் பறந்து சென்றன. அந்த நொடியில், நந்தி வர்மன் கண் முன் அன்று அவனும் பரிதியுமாகச் சேர்ந்து கட்டிய நாரைகளை விடுவித்த காட்சி கண் முன்னே வந்து போனது. "அன்று அந்த அன்னங்களுக்கு  ஆனதுதான் இன்று எனக்கும் ஆகுமோ"?

நீண்ட நேரம் அவர்கள் கண்களிலிருந்து அந்தப் பறவைகள் வெகு நேரம் மறையவில்லை.

காற்றுக்கென்ன பெயர்

 — தமிழுக்கும், அந்தத் தமிழை என் அய்யா கற்றுக்கொடுத்த நினைவுக்கும் ஒரு சிறு அஞ்சலி. இன்று காலை சிலப்பதிகாரம் மதுரைக் காண்டம் புரட்டிக் கொண்ட...