Sunday, June 18, 2023

ஐந்திணைக்கூழ்

பஞ்சாமிர்தம் என்பது வடமொழிச் சொல்லாகும். பஞ்சம் என்றால் ஐந்து. அமிர்தம் என்றால் "சாவில் இருந்து காக்கும் பொருள்" எனப் பரவலாக கருதப்படுவதாகும். இந்த வார்த்தைக்கு உன்னொரு உள்ளர்த்தமும் உள்ளது. 

தன்வந்திரி என்னும் தேவதைக்கு (கடவுள்)  அமிர்தம் என இன்னொரு பெயரும் உண்டு. இவர் மிகவும் பலவீனமான (நோயாலும் மற்றும் களைப்பிலும்) மக்களுக்கு புத்துயிரும் புதுப் பொலிவும் தருபவர். 

இன்று கிடைக்கும் பஞ்சாமிர்தம் பல வகைளில் கிடைக்கின்றது. அதில் என்னென்ன பொருட்கள் சேர்க்கப்படுகின்றன என்பது இடத்தைப் பொறுத்ததாகும். உதாரணத்திற்கு, இன்றும் ஒடிஷாவில் கிடைக்கும் பஞ்சமிர்தம் பால், தயிர், தேன், நெய் மற்றும் கங்கைநீர் கொண்டு செய்யப்படுகின்றது. பண்டை கால்ப் பழக்கம் ஆதலால் அந்தந்தப் பிரதேசத்தில் என்னென்ன வஸ்துக்கள் பொதுவாகக் கிடைக்கிறனவோ அவைகளைக்கொண்டே செய்வது என்பது நடைமுறை வழக்கத்தில் இருந்து உள்ளது எனத் தெரிகிறது.

தமிழ் நாட்டில் பஞ்சமிர்தம் என்பது முருகனுக்கு உகந்த அபிஷேகப் பொருள் ஆகும். அது என்ன முருகனுக்கு விசேஷம்? சற்று ஆராய்வோம். 

தமிழகத்தில் ஷண்முகனுக்கு பல தலங்கள் இருந்தாலும், குறிப்பிட்ட ஆறு தலங்கள் படைவீடாகக் கருதி வழிபடப்படுகிறது. போர் புரியச் செல்லும் தளபதி, தனது படைகளுடன் தங்கியிருக்கும் இடம் "படைவீடு' எனப்படும். அவ்வகையில் சூரபத்மனை வதம் செய்யச் சென்ற முருகப் பெருமான், படைகளுடன் தங்கியிருந்த தலம் திருச்செந்தூர் மட்டுமே. ஆனாலும், மற்ற ஐந்து தலங்களையும் சேர்த்து, "ஆறுபடை வீடு' என்கிறோம். திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமி மலை, திருத்தணிகை, பழமுதிர் சோலை என்பவையே இந்த ஆறு தலங்கள் ஆகும். 

அவ்வை சொன்னபடி, "குன்று இருக்கும் இடம் எல்லாம் குமரன் இருக்கும் இடம் ஆகும்".  இது வெறும் வாய்ப் பேச்சா , அல்லது இதன் பின் ஏதேனும் சித்தாந்தம் உள்ளதா? எதற்காகச் சரவணன் மலையில் உறைகிறான்? 

முருகன் அழகன்; வீரத்தின் சின்னம் ஆவான். கந்த புராணம் படித்தவர்களுக்குத் தெரியும். மூவுலகும் ஒரு காலத்தில் தாரகாசுரன், சூரபத்மன் மற்றும் சிங்க முகாசுரன் எனும் மூன்று கொடிய அரக்கர்கள் பிடியில் சிக்கித் தவித்த வேளையில்,  இம்மூவரையும் அழித்து உலகைக் காத்தவன். இவர்களை அழிக்க சாம , தான பேதம் மூன்றையும் முதலில் பயன் படுத்தி, அவை பயன் அற்று போகவே இறுதியாக, தண்டம் (பலம்) கொண்டு அவர்களை அழித்து உலகை உய்வித்தவன். அவர்களுடன் கடும் போர் மூண்டது. தந் பலத்தை எல்லாம் கொண்டே இறுதியில் வென்றான் வேலவன். 

கந்த புராணத்தில் வரும் மூன்று அரக்கர்களும் வேறு எங்கும் இல்லை. நம் ஒவ்வருவர் உள்ளேயும் உள்ள பல வேண்டத்தகாத குணங்களில் மூன்று - ஆணவம், கண்மம் மற்றும் மாயையே இம்மூன்று தீய குணங்கள் ஆகும். அகத்தில்  இவற்றை வெல்ல ஆத்ம பலம் அதிகம் தேவை. புறத்தில் , இவ்வசுரங்களை அழிக்க பலம் அதிகம் தேவை எனச் சித்தரிக்கப்பட்டுள்ளது. எனவே முருகனுக்கும் பலத்திற்கும் அதிக சம்பந்தம் உண்டு. 

பஞ்சாமிர்தம் நலிந்த ஒருவனுக்கு பலம் அளிக்கும் பொருள் ஆகும். எப்படி? பார்க்கலாம் இப்போது, தமிழனின் சாதுர்த்தியத்தை. 

சங்கத் தமிழில் நிலப்பரைப்பை (திணை) ஐந்தாகப் பிரித்து உள்ளனர் சான்றோர். பஞ்சாமிர்தத்திற்கு ஒவ்வொரு திணையிலிருந்தும் ஒரு பொருள் சேர்க்கப் படுகிறது . அவை கீழ்க்கண்டவாறு :


குறிஞ்சி - மலையும் மலை சார்ந்த நிலமும் - தேன் 

முல்லை - காடும் காடு சார்ந்த நிலமும் - நாட்டுச் சர்க்கரை (கரும்பு)

மருதம் - வயலும் வயல் சார்ந்த நிலமும் - வாழை

நெய்தல் - கடலும் கடல் சார்ந்த நிலமும் - தென்னை 

பாலை - முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து வெம்மையுற்ற‌ நிலம் - பேரீச்சம் பழம் 

இவை ஐந்தும் கெடாமல் பேண (பசு) நெய் 


இன்றைய பஞ்சாமிர்தத்தில் பொதுவாகத் தேங்காய் இருப்பதில்லையே என யோசிக்கலாம். மேற்படி  முறை பண்டை முறையாகும். எப்போது மருவியது எனச் சரியாகத் தெரியவில்லை. 

சரி, முருகனுக்கு மட்டும் என் இந்த பஞ்சமிர்த்தப் பிரசாதம்? அந்த காலத்தில் இன்று போல் பஸ் மற்றும் இரயில் எல்லாம் கிடையாது. முருகனை தரிசிக்க பல மைல்கள் காவடி ஏந்தி நடந்தே செல்லுவது வழக்கம். அது மட்டும் அல்ல. மலை ஏறித்தான் மால் மருகனை தரிசிக்க வேண்டும் ( திருச்செந்தூர் தவிர்த்து).   வழியில் ஹோட்டல்கள் கிடையாது. நடக்கவோ தெம்பு வேண்டும். high calorie instant energy food தேவையாய் இருந்தது. கண்டு பிடித்தான் பஞ்சாமிர்தத்தை. களைத்த யாத்திரீகனுக்கு பலம் சேர்த்து, புதுப் பொலிவைத் தரும் இந்த பஞ்சாமிர்தத்தை 3000 வருங்களுக்கு முன்பே, nutritionist என்று எவரும் உருவாகாத காலத்திலேயே , மனித சக்திக்கு வழி வகுக்கும் உணவாக நன்றே அடையாளம் கண்டவன் தமிழன். பஞ்சாமிர்தம் சுமார் ஆறு மாதம் வரை கெடாமல் இருக்கும். 

இதில் ஆச்சரியம் என்னவென்றால், பாலை என்பது தமிழகத்தின் பக்கத்தில் இல்லவே இல்லை. என்றால்,  பேரீச்சம் பற்றி எங்கணம் அறிந்தான்? கோழிக்கோடு துறை முகம் வழியாக அரபு நாடுகளுடன் வாணிபம் நடத்தியுள்ளான் பண்டைத் தமிழன். இதற்கு சங்க இலக்கியங்களில் சான்று உள்ளது. 

இது எல்லாம் சரி. அது என்ன ஐந்திணைக்கூழ்? தமிழில் கூழ் என்றால் neither solid nor liquid state food என்று அர்த்தம். பஞ்சமிர்தத்தின் பதத்தை ஒரு கணம் யோசித்துப் பாருங்கள். புரியும். ஐந்து திணை மூலப்பொருள் கொண்டு செய்யப்படும் இந்த தமிழனின் wonder energy food க்கு பண்டை தமிழ்ப் பெயர் ஐந்திணைக்கூழ்.  











 

  



   


 


No comments:

The World Series

I don't know how many of you had watched the World Series match last night, between KKR and King's Punjab. I did, fully, to the last...