Sunday, October 27, 2024

காலமெனும் கடலிலே

 குறள் வெண்பாக்கள் ஓதி குரல் கம்மும் பள்ளியிலே

நிறை மதியம் போல நின்ற நினைவுகள் கண் கூசுதே!


தென்னை மரம் ஏறியதும் திருட்டுப் பழம் பறித்ததுவும்

மின்னல் என மறைந்துவிட்ட மேனிநிறக் காலமடா!

கன்னிப் பருவத்திலே கவலையற்ற நாட்களிலே

என்னை மறந்தோடிய இன்ப நதி வேகமடா!


வீட்டுப் படிப்பு வெறுத்து  வெதும்பிய நெஞ்சத்துடன்

நாட்டுப் புறத்து விளையாட்டில் நயந்தோடும் வேளையிலே

கூட்டுக் குருவி கூட்டம் கூவி அழைத்த பொழுதெல்லாம்

காட்டுப் பறவையாய்க் கலந்தோடிப் போனதுவே!


பாட்டி சொன்ன கதைகளில் பாஞ்சாலி சபதமெல்லாம்

நாட்டியமாய் ஆடியதும் நடுமுற்றம் கோலமிட்டு

ஓட்டையிட்ட பானையிலே ஊறுகாய் போட்டதுவும்

தீட்டிய வண்ணக் கனவாய்த் திரும்பவும் வந்ததுவே!


அம்மி மீது அரைத்தெடுத்த சட்னி சுவை நாவினிலே

செம்மண் களிமண்ணோடு சிற்பங்கள் செய்ததுவும்

வெம்மையிலே வெயிலாடி வேப்பமரக் கீழினிலே

அம்மா அழைப்பதற்குள் அலைந்தோடிப் போனதுவே!


பொங்கல் தினம் புதுப்பானை பொங்கிவரும் சந்தோஷம்

மங்களமாய் கோலமிட்டு மாட்டுக்குத் தொழுவத்தில்

தங்கமென நீறு  பூசித் தலையெல்லாம் வகுந்தெடுத்து 

சங்கீத மேளத்தோடு சதுரகிரி போனதுவே!


முருங்கைமர உச்சியிலே முறித்த காய் வீழ்ந்ததுவும்

கரும்புத் தோட்டத்திலே கள்ளத்தனம் செய்ததுவும்

வரும்போது தண்ணீரில் வழுக்கி விழுந்ததுவும்

திரும்பிப் பார்க்கையிலே திகட்டாத நினைவுகளே!


கிணற்றங்கரை ஓரத்தில் கிளிஞ்சல்கள் பொறுக்கியதும்

மணற்பாங்கில் கோயில்கட்டி மனமெல்லாம் மகிழ்ந்ததுவும்

பணம்பார்க்கும் இக்காலம் பரிதவிக்க வைக்குதடா

இணைபிரியா நினைவுகளை ஏந்திக்கொண்டு நிற்குதடா!

No comments:

Tariff-trums

I woke up to the US Supreme Court gutting the Trump tariffs. Frankly, the odds were always 50–50. Now that the hammer has dropped, here are ...